சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்து சென்று மீண்டும் பணிக்கு சமூகமளிக்காத பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையை கைவிட்டவர்களாக கருதப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற 65வது சர்வதேச பொலிஸ் சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்ற இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், இம்மாதம் 4ஆம் திகதி பணிக்கு சமூகமளிக்கவிருந்த நிலையில், அன்றைய தினம் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால், ஆராய்ந்து பார்த்த போது கடந்த மே மாதம் 25ஆம் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பவில்லை என குடிவரவுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் சேவையை விட்டு வெளியேறியதாக பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.