நடராசா லோகதயாளன்.
மன்னார் பியர் பகுதியில் இருந்து ஓர் படகில் 14 ஆம் திகதி கடல் தொழிலிற்குச் சென்ற மூவரில் இருவர் தமிழக மீனவர்களால் உயிரோடு மீட்கப்பட்டபோதும் ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டம் பியர் பகுதியில் இருந்து கடந்த 14 ஆம் திகதி பகல் ஒரு மணிக்கு தொழிலிற்குச் சென்ற ஓர் படகு கரை திரும்பவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டு கடற்படையினருக்கும் அந்த தகவல் வழங்கப்பட்டது.
இருந்தபோதும் மூவருடன் பயணித்த இந்த படகு நடுக் கடலில் 14 ஆம் திகதி இரவே பழுதடைந்த காரணத்தால் மூவரும் தம்மை படகுடன் கட்டியுள்ளனர். இவ்வாறு கட்டியிருந்தவர்களை இந்திய ட்ரோலர் படகு அவதானித்து உயிருடன் இருந்த இருவரையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு இருவரையும் மீட்ட தமிழக ட்ரோலர் விசைப் படகு மன்னார் மீனவர்களை கச்சதீவை அண்மித்த பகுதியில் கொண்டு வந்து இறக்கியுள்ளனர்.
கச்சதீவிற்கு அருகில் கடலில் குதித்து கரையேறிய மோகன்ராஜ், ஜெனார்த்தனன் ஆகிய இரு மீனவர்களையும் கடற்படையினர் மீட்டு மன்னார் அழைத்து வந்தனர்.
இதேநேரம் படகில் உயிரிழந்த இராயமூர்த்தி என்னும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயது மீனவரை மன்னாரில் இருந்து ஓர் படகு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
மன்னாரின் இரு மீனவர்களையும் மீட்ட தமிழகம் இராமேஸ்வரம் விசைப்படகான IND TN 10 MM 738 இலக்க கார்மாக்ஸ் என்பரின் படகை செலுத்தி வந்த ஓட்டியான
தனுஷ்நீக்லாஸ் ரவீஸ்டன் என்னும் அந்தோணியார்புரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பான விபரம் கேட்டபோது,
17/51 என்ற பொயின்ரை அண்மித்த பகுதியில் 2022-07-16 அன்று இரவு 6.20 மணியளவில் ஓர் படகு தாண்ட நிலைமயில் இருப்பதனைக் கண்டோம். அது இலங்கை மீனவர்களினது என்பதனையும் அடையாளம் கண்டபோது அதில் தம்மைத் தாமே பாதுகாப்பதற்காகவும் தம்மை கடல் அலை இழுத்துச் செல்லாத வகையிலும் தாமே படகுடன் தம்மை இணைத்து கட்டியவாறு மூவர் தத்தளித்தவாறு இருந்தனர்.
இதனால் எமது தொழிலைக் கைவிட்டு உடனடியாக அந்த மூன்று உயிர்களையும் காப்பதற்காக முயன்றோம். அதற்காக சுமார் 2 மணிநேரம் போராடி இருவரை உயிரோடு மீட்டோம். இதற்காக எமது படகில் என்னுடன் இருந்த 7 பேரும் பெரிதும் முயன்ற சமயம் கடல் அலை அதிகமாக இருந்தமையால் அந்த மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன்பின்பு 3வது மீனவரை மீட்க முயற்சித்தோம். அப்போது அவர் உயிர் பிரிந்த நிலையில் காணப்பட்டார். அதனை இலங்கை மீனவர்களும் அறிந்திருந்தனர்.

இதனால் வேறு வழியின்றி மீட்கப்பட்ட இருவரை மட்டும் ஏற்றிய நாம் கச்சதீவை அண்மித்த பகுதிவரை உயிரைப் பணயம் வைத்தே வந்தோம். இலங்கை கடற்படை கண்டால் கைது செய்யும். இவர்களை எமது நாட்டிற்கு கொண்டு சென்றால் எமது கடற்படை எம்மை கைது செய்யும் என்ற நிலையில் இலங்கை மீனவர்களின் விருப்பத்தைக் கேட்டோம்.
அவர்களின் விருப்பத்திற்கு அமைய கச்சதீவை அண்டிய பகுதியில் அதிகாலை 5 மணிக்கு இறக்கி விட்டு அவர்கள் கச்சதீவை அடைந்து எமக்கு கை அசைத்து வழி அனுப்பும் வரை காத்திருந்து அவர்களின் உயிர் தப்பியதனை உறுதி செய்த பின்பு தமிழகம் திரும்பினோம் எனத் தெரிவித்தார்.
இதேநேரம் கச்சதீவில் கரையேறிய மோகன்ராஜ் என்பவரின் மைத்துனரே ஜெனார்த்தனன் ஆவார். இவர்களின் உறவுகளிற்கு கடற்படையிர் இன்று காலையில் இருவரும் பத்திரமாக உள்ள தகவலையும் 3வது மீனவர் உயிரிழந்தார் என்ற தகவலையும் தொலைபேசி ஊடாக வழங்கியதாக உறவினர் உறுதி செய்தனர்.
TL