பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை பாராளுமன்றப் பொதுச் செயலாளர் நாயகத்தின் தலைமையிலான குழுவிடம் நேற்று (05) கையளித்துள்ளதாக சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (05) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்காக தனிநபர் பிரேரணையொன்றை, ‘பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகளை இரத்துச் செய்தல் சட்டமூலம்’ என்று குறிப்பிடப்படும் பிரேரணையொன்று பாராளுமன்ற பொதுச்செயலாளர் நாயகத்தின் தலைமையிலான குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்தப் பிரேரணை தொடர்பான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் தாமதிக்காமல் எடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி கூட்டு அரசாங்கத்தால், இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படுமென்று வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி மீதான நம்பிக்கை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் காரணமாகவே இந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளேன்” என்றார்.
