மின் கட்டண உயர்வுக்கான காரணத்தை வெளியிட்டார் சஜித்!

0
18

இலங்கையில் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் தரமற்ற நிலக்கரி கொள்முதல் விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, அரசு தொடர்ந்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி, ஊழல் நிறைந்த பரிவர்த்தனைகளின் சுமையை பொதுமக்கள்மீது தள்ளி வருகிறது. இந்த கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தங்களில் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தில் திட்டமிட்டபடி மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், அண்மைய தினங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட 13ஆவது கப்பலிலிருந்த நிலக்கரி பயன்படுத்தப்பட்டதாகவும், இதற்கு முன் கொண்டுவரப்பட்ட பல கப்பல்களிலிருந்த நிலக்கரியும் தரமற்றவை எனவும் அவர் கூறினார்.

தரமற்ற நிலக்கரி பிரச்சினை இல்லை என அரசு மறுத்தாலும், அதனால் ஏற்பட்ட இழப்பை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வசூலித்தால் அந்த நிறுவனம் திவாலாகும் நிலைக்கு செல்வதாக சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனால், அரசு நிலக்கரி வழங்குநரை பாதுகாக்கிறதா அல்லது மின்சார நுகர்வோரைக் காப்பதற்கா செயல்படுகிறது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

ஜனாதிபதி அனுர தலைமையிலான அரசு, மக்களை பாதுகாக்கும் என வாக்குறுதி அளித்திருந்த போதிலும், தற்போது தரமற்ற நிலக்கரி நிறுவனங்களின் அழுத்தத்தில் செயல்படுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சில மின்நிலையங்கள் பராமரிப்பு காரணமாக நிறுத்தப்படுவதால், அதிக மின்சார தேவை உள்ள காலங்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை உடனடியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நுகர்வோரின் உரிமைக்காக கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here