முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்றைய தினம் (04) வாக்குமூலம் அளிக்கப்போவதில்லை என மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரமவிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தனது சட்டத்தரணி சந்தீப்த சூரியாரச்சியின் ஊடாக நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், தமது தரப்பு சேவைபெறுநர் சம்பவம் தொடர்பில் விரிவான வாக்குமூலத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வழங்கியுள்ளதாக, அவரது சட்டத்தரணி அனுஜ ப்ரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி மீண்டும் வாக்குமூலம் வழங்க இயலாது என அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மாளிகாகந்த நீதவான், ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைய இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை எனவும் அறிவித்தார்.