X Press Pearl கப்பல் தொடர்பான சிங்கப்பூர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் குறித்த நீதிமன்ற நடவடிக்கைளை நிகண்காணிக்கவும் தனியான சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சட்ட மா அதிபர் திணைக்களத்தின் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் புதிய குழு நியமிக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி அசேல ரெகவ தெரிவித்துள்ளார்.
அதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிடமிருந்து இந்த வாரத்திற்குள் அனுமதி பெறப்படவுள்ளது.
இதேவேளை, X-Press Pearl கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை சர்வதேச வணிக நீதிமன்றத்தில் கொண்டுவருவது தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானம் எதிர்வரும் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.
குறித்த வழக்கை கையாளும் சட்ட நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.