Wednesday, June 26, 2024

Latest Posts

மலாவி ராணுவ விமான விபத்து: துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் சென்ற யாரும் உயிர் பிழைக்கவில்லை. இதனை மலாவி நாட்டின் அதிபர் லாசரஸ் சக்வேரா உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக உரையாற்றிய மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா, “இந்தச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் வருத்தப்படுகிறேன். துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் காடுகளில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. இது பெரும் சோகம்.” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா. 51 வயதான துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா 9 பேருடன் ராணுவ விமானத்தில் தலைநகர் லிலொங்வேயில் இருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மசுஸு சர்வதேச விமான நிலையத்துக்கு புறப்பட்டார். அவர் பயணித்த ராணுவ விமானம் லிலொங்வேயில் இருந்து 45 நிமிடங்களில் மசுஸு விமான நிலையத்தில் அடைய வேண்டிய நிலையில், அது மாயமாகியது.

விமானத்துடனான தொடர்பினை விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இழந்துள்ளனர். இதையடுத்து மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தேடுதல் பணியை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ரேடாருக்கு வெளியில் சென்ற விமானத்துடனான தொடர்பை பெற அணைத்து வகையிலும் முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடந்து வந்தன. இந்தநிலையில் தான் சிகன்காவா மலைப்பகுதியில் விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த எவரும் உயிர் பிழைக்கவில்லை. தற்போது உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்று மலாவி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.