Thursday, September 19, 2024

Latest Posts

சிங்கள மொழியைப் பாதுகாப்பது போல் தமிழ் மொழியையும் நான் பாதுகாப்பேன்

“பௌத்த கலாசாரத்தால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஏனைய இன மக்களின் கலாசாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் என நம்புகின்றேன். இருந்தபோதும் தாய்மொழியை மறக்கும் காலம் வந்துவிட்டது. எனவே, நான் எனது சிங்கள மொழியைப் பாதுகாப்பது போல் தமிழ் மொழியையும் பாதுகாப்பேன். அதேவேளை, நான் கலாசாரத்தை நம்புகின்றேன். எனவே, ஏனைய இன மக்களின் கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் வழங்குவேன்.”

  • இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்

மட்டக்களப்பு, சண்றைஸ் ஹோட்டலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தம்பிமுத்து தயாபரன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணம் எனது தந்தையின் காலத்திலேயே அதிகமான அபிவிருத்திகளைக் கண்டது. தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளைப் போன்று கிழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். எமது அரசில் அதிவேக வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கொண்டுவரப்படும் என நான் உறுதியளிக்கின்றேன். இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை, அபிவிருத்தி என்பன முன்னேற்றம் அடையும். இங்குள்ள விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் என்பனவற்றுக்கு ஏற்றுமதி மூலம் உலக சந்தையில் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

எங்களுக்குத் தேவை இந்த நாட்டை அபிவிருத்தியுடைய நாட்டாக மாற்ற வேண்டும் என்பதே. இங்குள்ள இளைஞர்களுக்குப் பலமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இங்குள்ள அரசியல்வாதிகள் இன, மத ரீதியான பணிகளையே முன்னெடுத்து வருகின்றனர். ஏற்படவுள்ள மாற்றத்தைப் பற்றி பிழையான தகவல்கள் வழங்க முடியாது. இவர்களுக்கான நல்ல ஒரு எதிர்காலத்தை என்னால் வழங்க முடியும் என உறுதி கூறுகின்றேன்.

இலங்கையிலுள்ள கலாசாரங்களை, இங்குள்ள இளைஞர், யுவதிகளைப் பற்றி எவருமே சிந்திப்பதில்லை. இலங்கையிலுள்ள கலாசாரங்களை பௌத்த கலாசாரத்துக்குச் சமனாக கிழக்கு மாகாண கலாசாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும் என உறுதி என உறுதி கூறுகின்றேன்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் இங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை என்னால் பெற்றுத் தர முடியும். கடந்த காலங்களில் மக்கள் கஷ்ட காலத்தைக் கடந்து வந்துள்ளதுடன் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் இனவாதம், மதவாதம் அதிகரிக்கின்றது. பிரிவினையுடைய அரசியலை நான் முன்னெடுப்பதில்லை. நான் முடியுமானவற்றை மட்டுமே கூறுவேன்.

இங்குள்ள உங்களுடைய திறமைகளைப் பாவித்து வெளிநாடுகளைப் போல் வியாபாரம், விவசாயம் என்பனவற்றில் முன்னேற்றமடைந்து தொழில்நுட்பத்துடன் கூறிய அறிவைப் பெற்று வீட்டுக்கு உதவுமாறு நான் அழைப்பு விடுகின்றேன். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற உதவுமாறு உங்களிடம் வேண்டுகின்றேன். புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும். அதற்கு நான் உதவி செய்வேன். மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் உங்களிடம் வேண்டுகின்றேன்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.