சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் விடுத்துள்ள அறிவிப்புக்கு அமைய இந்த நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் சீனா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்வென எட்டு பேர் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
மறுசீரமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்கவுடன் நடத்திய கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் உள்ளனர்.