ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகலவத்தை தொகுதியின் பிரதான அமைப்பாளர் ரஞ்சித் சோமவங்ச எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துகொண்டுள்ளார்.
ரஞ்சித் சோமவன்ச இன்று எதிர்க்கட்சி மற்றும் SJB தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததாக SJB அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சோமவன்ச, மேல் மாகாண சபையில் சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சராகவும், கல்வி, கலாசாரம் மற்றும் கலை அமைச்சராகவும் கடமையாற்றியதுடன், அக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க பணிகளையும் ஆற்றினார்.
சோமவன்ச கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டதாரி என்பதுடன் பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவர் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டுள்ளார் என SJb மேலும் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முற்போக்கு மாணவர் முன்னணி மற்றும் ஐக்கிய மாணவர் முன்னணியின் தலைவராக இருந்த அவர், பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அரசியலில் பிரவேசித்தார்.
சோமவன்ச 1993 ஆம் ஆண்டு மேல் மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் என்றும், அவர் பல தசாப்த கால அரசியல் அனுபவமுள்ளவர் என்றும், மேல் மாகாண சபையின் அவைத்தலைவர் மற்றும் பிரதி அவைத்தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர் என்றும் SJb மேலும் குறிப்பிட்டுள்ளது.