வெலிக்கடை கைதிகள் கொலை வழக்குத் தீர்ப்பு பிற்போடப்பட்டது, காரணம் இதோ

0
62

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 08 கைதிகளை சுட்டுக்கொன்றமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரான எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில் தீர்ப்பு தயார் நிலையில் இல்லை என்பதால் எதிர்வரும் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டிஆரச்சி மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற விசேட நீதிபதிகள் குழாமினால் இன்று (06) வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்தது.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் 8 சிறைக்கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டமா அதிபரினால் வழக்கின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த சிறைச்சாலைகளின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியான இந்திக்க சம்பத் என்பவர் வழக்கு தொடரப்பட்ட சந்தர்ப்பத்தில் வௌிநாடு சென்றிருந்தார்.

அவரின்றி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், முறைப்பாட்டாளர் தரப்பினரால் அவருக்கு எதிரான சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை என சாட்சி விசாரணைகளின் நிறைவில் நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.

அதற்கிணங்க, குறித்த பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்த நீதிபதிகள் குழாம், நியோமால் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுத்தது.

2012 நவம்பர் 09 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலகத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தாலும் 08 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே வழக்கை தாக்கல் செய்வதற்கு போதுமான சாட்சிகள் சட்டமா அதிபருக்கு காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here