தோட்ட தொழிலாளருக்கான இந்த மாத சம்பள உயர்வு 400/= ரூபா அடுத்த மாதம் வழங்க பட உள்ளது. இதையிட்டு மகிழ்ச்சி. அப்படி அது வழங்க படும் போது, மூன்று அரசாங்க பெருந்தோட்ட நிறுவனங்கள், இருபத்தி இரண்டு தனியார் தோட்ட நிறுவனங்கள், சிறு தோட்ட உடைமையாளர் தோட்டங்கள், தனியார் சிறு தோட்டங்கள், ஆகிய நான்கு பிரிவு தோட்டங்களில் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த சம்பள உயர்வு கிடைக்க வேண்டும். கடந்த வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பின் போது, அரசுக்கு ஆதரவாக தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிக்கள் வாக்களித்தோம்.
அதன் போது இதை சொல்லித்தான் நான் வாக்களித்தேன். இப்போதும் அதையே இங்கே தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தொழில் அமைச்சின் அமைச்சக ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க. மனோ கணேசன் எம்பி, திகாம்பரம் எம்பி, கலைசெல்வி எம்பி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளதாவது;
இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட திகாம்பரம் எம்பி, “ அரசாங்கத்தின் 200/= ரூபா கிடைக்கும் என எண்ணுகிறேன். ஆனால், கம்பனி தோட்டங்களில் இப்போதே, தொழிலாளர் கொண்டு வர வேண்டிய கொழுந்து நிறை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. வழமையை விட அதிக நிறை கொண்டு வர வேண்டும். இல்லா விட்டால், முழு நாள் சம்பளம் தர மாட்டோம் என்று இப்போதே கம்பனிகள் தொழிலாளரிடம் கூற தொடங்கி விட்டன. இதை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும். இல்லா விட்டால், நீங்கள் சொன்ன சம்பள உயர்வு 400/= ரூபா கிடைக்காது.” என கூறினார்.
இவ்வேளையில் மீண்டும் கருத்து கூறிய மனோ கணேசன் எம்பி, “எல்லா காலத்திலும், எல்லா பிராந்தியங்களிலும் ஒரே மாதிரியான, கொழுந்து கிடைப்பதில்லை. ஆகவே அதை வைத்து கொண்டு நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்து வழங்கி விளையாடாமல், கண்காணிப்பது அரசின் பணியாகும். அதை இந்த தொழில் அமைச்சு, குறிப்பாக அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் கவனத்தில் எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.
