மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய எதிர்மறை தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சாலியா பீரிஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, சுற்றுலா துறையில் ஏற்படக்கூடிய வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு பண அனுப்புதல்கள் குறைவதற்கான அபாயங்கள் குறித்து அரசு முன்கூட்டியே கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக ஆட்சியாளர்கள் வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவிற்கு முக்கிய காரணம் முடிவுகளை எடுப்பதில் ஏற்பட்ட தாமதமே எனக் குறிப்பிட்ட அவர், இம்முறை அத்தகைய கொள்கைத் தவறுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், சிங்கப்பூர் போன்ற நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு மக்களை விழிப்புணர்வு செய்ய வேண்டிய அவசியத்தையும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலியா பீரிஸ் இங்கு வலியுறுத்தினார்.
