2018 ஆம் ஆண்டு திகன கலவரம் தொடக்கம், ஈஸ்டர் தாக்குதல் 2019, COVID-19 பரவல் உள்ளிட்ட பல நெருக்கடிகளை கடந்து வந்துள்ள நாட்டின் வணிகர்களிடம் தொடர்ந்து 36% வருமான வரி வசூலிக்கப்படும் நிலையில், அவர்கள் நாட்டிற்குள் மீண்டும் முதலீடு செய்வது கடினமாகும் என டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரளியா குழுமம் தலைவரான அவர், தற்போதைய வரி அமைப்பு வணிகர்களுக்கு பெரும் சுமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்டின் நிதி நிர்வாகம் நடைபெற்று வருவதாகவும், இந்த 36% வரி விதிப்பு முக்கியமாக கடன் திருப்பிச் செலுத்துவதற்கான பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், 2018 முதல் தொடர்ச்சியாக ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள், பொருளாதார வீழ்ச்சி மற்றும் தற்போதைய சர்வதேச பதற்ற நிலை ஆகியவற்றின் பின்னணியில் இத்தகைய அதிக வரி விதிப்பு நீடித்தால், நாட்டில் மறுமுதலீடுகள் குறைந்து விடும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, வணிகர்களுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கருத்துகளை அவர் காலி நகரில் நடைபெற்ற “கோல் சிட்டி சென்டர்” வர்த்தக வளாக திறப்பு விழாவில் உரையாற்றும் போது வெளியிட்டார்.
