ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64 அப்பாச்சி ஹெலிகொப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த “நியாயமற்ற ஈரானிய ஆக்கிரமிப்புக்கு” பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
நேற்று (09) மாலை 17:00 EST (BST இரவு 22:00) மணிக்கு இந்தத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம்அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “இந்த இராணுவ நடவடிக்கை ஈரானின் அத்துமீறலுக்கு வழங்கப்பட்ட ஒரு தகுந்த மற்றும் சமநிலையான பதிலடியாகும்” என்று சென்காம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஓமன் கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகொப்டர் ஈரானிய ட்ரோன் (ஆளில்லா விமானம்) ஒன்றின் தாக்குதலால் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், அந்த ட்ரோன் திட்டமிட்டு ஹெலிகொப்டரைத் தாக்கியதா என்பது குறித்து இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஹெலிகொப்டர் கடலில் விழுந்ததும், அதில் இருந்த இரண்டு அமெரிக்க விமானிகளும் அமெரிக்காவின் அதிநவீன கடல் ட்ரோன் மூலம் 2 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ஜனாதிபதி ட்ரம்ப, “ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகளும் காயங்களின்றி பாதுகாப்பாக உள்ளனர். இருப்பினும், அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் அவசியமாகப் பதிலடி கொடுத்தே தீர வேண்டும்” எனக் குறிப்பிட்டு, இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
