யாழில் தமிழரசுடன் அநுர அவசர சந்திப்பு – ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் பேச்சு 

0
228

இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவினர், மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ். மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது பிரதானமாக ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ். குலநாயகம், ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகர் உட்படப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குழுவினர் நேற்று தமிழரசுக் கட்சியினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்த நிலையில் இன்று தேசிய மக்கள் சக்தியினரும் தமிழரசுக் கட்சியினரைச் சந்தித்துள்ளமை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here