முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க மக்கள் எந்த விதத்திலும் தயாராக இல்லை என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் T. B. சரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சமீப காலங்களில் ரணில் விக்ரமசிங்க மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால் இப்போது அவர் பத்து வயது இளமையாகி விட்டதாக கூறப்படுகின்றது. அப்படியானால் அந்த மருந்தை நாட்டின் முதியவர்களுக்கும் வழங்கலாம் அல்லவா?
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய சிலர் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் குழந்தையையும் பெற்றுக் கொண்டு மீண்டும் அரசியலுக்கு வருவார் எனக் கூறுகின்றனர். அவர் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தாலும், இந்த நாட்டின் ஆட்சியை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
உலகின் பல நாடுகளில் வயதான தலைவர்களிடம் ஆட்சி சென்றபோது ஏற்பட்ட விளைவுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 80 வயதான ஒருவரிடம் ஒரு வீட்டின் பொறுப்பைக் கூட முழுமையாக ஒப்படைக்காத நிலையில், நாட்டின் பொறுப்பை வழங்குவது குறித்து மக்கள் சிந்திப்பார்கள்.”
எனத் தெரிவித்தார்.
பொலன்னறுவை பகுதியில் கால்வாய் அணை மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் நேற்று (18) கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
