Thursday, May 2, 2024

Latest Posts

செந்தில் தொண்டமான் குறித்து லண்டன் தமிழர்கள் மத்தியில் அண்ணாமலை கருத்து

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானின் நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்னைகளை தீா்க்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் லாா்ட்ஸ் அரங்கத்தில், பிரிட்டன் தமிழ்ச் சங்கம், சங்கமம் யுகே ஆகியவை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவா் இவ்வாறு கூறினார்.  

அவர் மேலும் கூறுகையில்,

பிரதமா் மோடியால்தான் இலங்கை பிரச்னைக்குத் தீா்வுகாண முடியும்.  இலங்கையில் நிலவும் பிரச்சினை சுமாா் 80 முதல் 85 ஆண்டுகளாக உள்ளது. 2009 இலங்கைத் தமிழா்கள் வரலாற்றிலேயே மிகத் துயரமான ஆண்டாக அமைந்தது. அதற்கு முக்கியப் பொறுப்பு, அப்போதைய காங்கிரஸ் அரசு. கடந்த 9 ஆண்டுகளில், பிரமதா் மோடி தலைமையிலான இந்திய அரசு, இலங்கையின் வடகிழக்கு பகுதி மற்றும் மத்திய பகுதிகளில், தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது.

யாழ்ப்பாண கலாசார மையத்தைப் புனரமைத்துக் கொடுத்துள்ளது. கொழும்புடன், யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரயில் போக்குவரத்து அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னை-பலாலி விமான நிலையம் இடையே தினசரி விமான சேவை நடைபெறுகிறது. காரைக்கால்-காங்கேசன்துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்.

அண்மையில் பொருளாதார பாதிப்படைந்த இலங்கைக்கு, 3.8 பில்லியன் டாலா் அளவிலான கடனுதவி, 40,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெட்ரோல், காய்கறிகள், உணவுப் பொருள்கள் என உதவி, இலங்கையை சரிவிலிருந்து காப்பாற்றியது இந்திய அரசு.ஈழத்தில் மிகவும் அபாயகரமான விகிதத்தில், இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இந்த மாற்றங்களை தடுக்க இலங்கை அரசுடன் இணைந்து பிரதமா் மோடி முனைப்புடன் பணியாற்றி வருகிறாா்.

தமிழா்களின் தொல்லியல் தலங்கள், தமிழா்களின் தனித்துவமான கலாசாரம் மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்துபவை. யாழ்ப்பாணத்தில் பெருமளவில், பௌத்த தொல்லியல் தலங்கள் உருவாகி வருவதால், பிற்காலத்தில், தமிழா்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையே அமைதியில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இலங்கை ராணுவம், தமிழா் பகுதியில் வளமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்து முகாம்கள் அமைத்திருக்கின்றன. ஈழத் தமிழா்களின் பிரச்னைகள் குறித்து, இலங்கைப் ஜனாதிபதிக்கு கொண்டு செல்லும் முயற்சியின் விளைவாக, இரண்டு வாரங்களுக்கு முன்பாக, மத்திய மலையகப் பகுதியிலிருந்து செந்தில் தொண்டைமான் எனும் தமிழா், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்னைகளை தீா்க்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இலங்கைத் தமிழா்களுக்கு சம உரிமை வழங்கும் 13-ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு என்று பிரதமா் மோடி, தனது இலங்கைப் பயணத்தின்போது வலியுறுத்தினாா் என்றாா்.  

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.