மகாவலி திட்டத்தின் தற்போதைய நிலை மிகவும் வருத்தமளிக்கிறது என சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“இன்று மகாவலி திட்டம் அழிக்கப்பட்டு வருகிறது. முதலில் மகாவலி காணிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டு, பிரதேச செயலாளர்களுக்கு மகாவலி காணி அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன. இன்று பார்க்கும் போது மகாவலியக்கு நடந்ததை கூறுவது மிகவும் வருத்தமாக உள்ளது.
இப்போது இந்த அரசின் தவறான கொள்கைகளால் மொத்தம் 65000 ஏக்கர் நிலங்கள் சேதமடைந்துள்ளன. இதற்கு அரசியல் தலைமைகள், அமைச்சர்கள், செயலாளர்களும் பொறுப்பு. மேலும் இவற்றுக்கு இழப்பீடு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக அமைச்சரே ஊடகங்களுக்கு கூறுகிறார்.
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 1983-84 ஆம் ஆண்டு தெஹிஅத்தகண்டிய மற்றும் கிராந்துருகோட்டே பிரதேசங்களில் பயிர்கள் அழிக்கப்பட்ட போது காமினி திஸாநாயக்க அவர்களின் தலைமையில் அப்பகுதி மக்களுக்கு ஒரு வருடம் உணவு வழங்கப்பட்டதை நினைவுபடுத்துகின்றேன்.
ஆனால் இன்று இந்த அரசாங்கம் செயல்படும் விதம் குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மயந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.