Tuesday, May 21, 2024

Latest Posts

குற்றச் செயல்களில் ஈடுபட்டபொலிஸார் இடைநிறுத்தம்

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸாருக்குரிய ஒழுக்கம் தவறிச் செய்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (23) பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து, தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் வெளிவந்த அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, கடந்த 11ஆம் திகதி ஏறாவூரைச் சோந்த இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலை பார்த்துவரும் கடையில் வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்புவதற்காக இரவு 11 மணியளவில் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அவ்வேளை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 3 பொலிஸார் இளைஞரை நிறுத்தி, அச்சுறுத்தி, அவரிடம் இருந்து 6500 ரூபாவை பறித்தெடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸார் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதனையடுத்து, அந்த 3 பொலிஸ் அதிகாரிகளும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

மேலும், கடந்த 20ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றிவந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில், அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

இவ்வாறு குற்றச் செயல்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு, பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.