வருடாந்த இடமாற்றத்தின் கீழ் நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் 56 மேலதிக நீதவான்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த வருடம் இரண்டாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட கார்களை பாதுகாப்பாக பயன்படுத்தி மீண்டும் அமைச்சுக்கு வழங்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கும் நீதிச்சேவை ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சினால் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுவதில்லை என கணக்காய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை கருத்திற்கொண்ட நீதியமைச்சு, நீதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கார்களை பாதுகாப்பாக பயன்படுத்துமாறும், அவற்றை மீண்டும் அமைச்சுக்கு வழங்குமாறும் நீதிபதிகளுக்கு அறிவிக்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பான கோரிக்கையை கருத்தில் கொண்டு, அமைச்சினால் பயன்படுத்தப்படும் கார்களை பாதுகாப்பாக பயன்படுத்துமாறும், அவற்றை திருப்பி அனுப்புமாறும் நீதிச்சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.