நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சராக இருப்பதற்கு வெட்கமில்லையா என நீதி அமைச்சரைப் பார்த்து நாடாளுமன்றத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற உரையின்போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இங்கே நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் கப்பல் போக்குவரத்து அமைச்சரைப் போன்றே எமது நாட்டின் நீதி அமைச்சர் உள்ளார் என நான் கூறுவது வழக்கம் இம்முறையாவது அதனை சொல்லாமல் விடுவமோ என்று நினைத்தால் கடந்த சில நாட்கள் இந்த நாட்டில் இடம்பெற்றவைகளை பார்க்கும்போது நீதி இல்லாத நாட்டிலே ஓர் நீதி அமைச்சர் என்றே எனது பேச்சை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
நீதி இல்லாத நாடு எனச் சொல்வதற்கு பிரதான காரணம் நாட்டிலே வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு விதமாக சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது அப்பட்டமாகத் தெரிகின்றது.
இதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இல்லை. வடக்கு கிழக்கிலே மரணித்தவர்களை நினைவு கூறுகின்ற உரித்தை மரணித்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள், மற்றவர்களும் உபயோகப்படுத்துகின்ற போது அவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள்.
பொலிசார் நீதிமன்றங்களை நாடினார்கள் நீதிமன்றங்களும் பொலிசாரினுடைய கோரிக்கைக்கு இடமளித்து பழக்கமாகிவிட்ட நீதவான் நீதிமன்றங்கள் பல இடங்களிலே என்ன செய்வது என்று தெரியாமல் நீதவான்கள் திக்குமுக்காடி இருந்தார்கள்.
குற்றவியல் சட்டக் கோவையின் 106ஆம் பிரிவு வேறு, வேறு காரணங்களிற்காக சட்டத்திலே கொடுக்கப்பட்டிருக்கின்றது இப்படியானதற்கு அல்ல என பல ஆண்டுகளாக நான் இங்கேயும் நீதிமன்றங்களிலும் சொல்லி வருகின்றேன்.
ஆனால் நீதவான்மார் பயப்படுகின்றார்கள் அதுதான் உண்மை. அதற்காக உரித்திருக்கின்றது என்பதும் அவர்களிற்கு தெரியும் ஆனால் பொலிஸாரையும் ஆட்சியையும் பகைக்கவும் விரும்பவில்லை ஆகையினால் வேறு சில தடைகளைப் போடுகின்றனர் நிபந்தனையை விதிக்கின்றனர்.
இந்தச் சட்டம் இவ்வாறான ஒன்றிற்கு பொருத்தமே அற்றது என்று சொன்னால் அதை கண்டுகொள்கின்றார்கள் இல்லை. இந்தத் தடவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திலே மட்டும்தான் 7 பொலிஸ் நிலையம் சார்பில் தாக்கல் செய்த வழக்கிற்கு இப்படியான சட்ட ஏற்பாடு இந்த நினைவு கூரல் விடயத்திற்கு பொருத்தமற்றது என நீதவானே ஏற்றுக்கொண்டு அத்தனை வழக்குகளையும் புறக்கணித்தார் மற்ற எல்லா நீதிமன்றங்களிலும் சில சில நிபந்தனைகளை விதித்தார்கள்.
இப்படியாக நாட்டிலே வெவ்வேறு மக்களிற்கு சட்டம் வெவ்வேறு விதமாக உபயோகிக்கப்படுகின்றது. கொழும்பிலே றோகன விஜயவீரவின் படத்தை அவரது படத்தை பொறித்த தொப்பியை வீதி, வீதியாக கொண்டு செல்ல முடிகின்றது.
ஆனால் உயிரிழந்த உறவுகளை நினைவுகூற பலவிதமான நிபந்தனைகள் ஏன் இந்த நாட்டில் இரண்டு விதமாக சட்டங்கள் பாய்கின்றன. இது இனங்களிற்கு இடையில் மட்டுமல்ல சமயங்களிற்கு இடையிலும் இருக்கின்றது என்றார்.