அர்ச்சுனாவின் சேட்டைகளுக்கு இடமில்லை – இனி வந்தால் பொலிஸில்தான் இருப்பார்”நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்.” – இவ்வாறு யாழ். போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், தன்னை சேர் என்று அழைக்குமாறும் கூறி எம்மோடு முரண்பட்டார்.
அவரைச் சேர் என்று அழைக்க முடியாது என்று பதிலளித்தமைக்கு என்னை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன் எனவும், நாடாளுமன்றத்துக்கு அழைத்து கேள்வி கேட்பேன் என்றும் அவர் கூறினார். அத்துடன் என்னை வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லுமாறும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பம் விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது.
மீண்டும் ஒருமுறை அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் குழப்பம் விளைவிக்க முற்படுவாராயின் வாசலிலேயே வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்.” – என்றார்