குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், உள்வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் வெளியூர் செல்லும் இலங்கையர்களால் நிரப்பப்பட வேண்டிய வருகை மற்றும் புறப்பாடு (departure cards) அட்டைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதியை செய்துள்ளது.
அதன்படி, இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் மற்றும் நாட்டிலிருந்து புறப்படும் உள்ளூர்வாசிகளும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது பின்வரும் இணைப்பின் ஊடாக அட்டைகளை பூர்த்தி செய்ய முடியும் : https://eservices.immigration.gov.lk/emb/eEmbarkation/
இந்த வசதி ஜனவரி 01, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விமானப் பயணிகள் தங்கள் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சம்பிரதாயங்களை பூர்த்தி செய்யும் போது விமான நிலையத்தில் விமான பயணிகள் அனுபவிக்கும் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இல்லுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
N.S