தமிழரசு தலைநிமிர வேண்டும் – மக்களின் தீர்ப்புக்கமைய தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் என்று கஜேந்திரகுமார் வலியுறுத்து

0
294

“இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

“தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது.” – என்றும் அவர் கூறினார்.

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தைக் கட்சி தொடர்ந்தும் அனுமதிப்பதன் ஊடாகத் தொடர்ந்தும் ஒரு மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியலைத் தள்ளும்.” – என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஒரு பொதுப்புள்ளியில் சந்திப்பதற்குத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்
குழுத் தலைவர் சிறீதரனுடன் ஏற்கனவே பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதேபோல் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்தார்.

இந்தப் பேச்சுகளை அடுத்த ஆண்டில் முன்கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழரசுக் கட்சி சரியான மாற்றங்களைச் செய்யுமானால் தமிழினத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஒரு சுபீட்சமாக அமையும் என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here