மக்கள் விடுதலை முன்னணி மீது அண்மையில் முட்டை தாக்குதல்கள் மேற்கொண்டமையும், ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் பேரன் மீதான முட்டைத் தாக்குதலும் அண்மைக்காலமாக அரசாங்கமும் சமூகமும் சீரழிந்து வருவதன் அளவு இதுவாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கொள்கையில் இருந்து விலகி,வேலைத்திட்டங்கள் செயலிழந்து, விழுமிய மதிப்புகளால் வீழ்ச்சி கண்ட நாட்டால் முன்னேற முடியாது என தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர்,முட்டை தாக்குதல் போன்ற கேவலமான செயல்கள் சீரழிந்த அரசாங்கத்தின் யதார்த்தத்தையே புலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்
டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்களை வழங்கும் முன்னோடித் திட்டமான ‘பிரபஞ்சம்’திட்டத்தின் 11 ஆவது கட்டம் மதவாச்சிய அகுநொச்சி மகா வித்தியாலய நேற்று (01) இடம்பெற்றபோதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் முகமாக தகவல் தொழில்நுட்பப் புரட்சியை முன்கொண்டு செல்வது அதன் ஒரு தொடக்கங்களில் ஒன்றாகும் என தெரிவித்த அவர், அதிகாரம் இல்லாமலயே, தான் குறித்த புரட்சியை நடத்துவதாகவும் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக தகவல் தொழில் நுட்ப புரட்சி, டிஜிட்டல் பொருளாதாரப் புரட்சி என்பவற்றைக் கூறலாம் எனவும் இந்த புரட்சி உலகின் பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க பில்லியன் டொலர் வியாபாரம் என அடையாளப்படுத்தப்படும் கங்வேனன் வியாபாரம் உலகில் மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதாகவும் இவற்றை உருவாக்கும்போது நம் நாட்டிலும் அந்நியச் செலாவணி பிரச்சினையோ பற்றாக்குறையோ ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்.
பிரபஞ்சம் போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து சிலர் கபடத்தனமாக பேசுகின்றனர் என தெரிவித்த எதிர்கட்சி தலைவர், அவ்வாறானவற்றை தான் கருத்திற் கொள்வதில்லை என தெரிவித்தார்.
இந்நாட்டின் குழந்தைகளுக்காக நாடு முழுவதும் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.