Thursday, October 24, 2024

Latest Posts

அரச ஊழியர்களின் சம்பளத்தை ஜனவரி முதல் உயர்த்த வேண்டும் – ரணில்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக சமகால அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க நாம் திட்டமிட்டிருந்தோம். சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியானது எமது அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

கொழும்பு மலர் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் அவர் மேலும் கூறியதாவது,

”அரசியலமைப்பின் 43ஆவது சரத்தின் கீழ் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நாம் தீர்மானம் எடுத்திருந்தோம். அனைத்து அரச ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானித்திருந்தோம்.

சம்பள உயர்வுக்கான கோரிக்கை நியாயமானது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஊதியத்தின் மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது. மக்கள் மிகவும் நெருக்கடியிலேயே வாழ்ந்தனர். அவர்கள் கடனில் மூழ்க வேண்டியிருந்தது. சிலர் தங்கள் சொத்துக்களை விற்க வேண்டியிருந்தது. நான் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் நிவாரணம் கொடுக்கும் நிலை இருக்கவில்லை. அதை நாட்டுக்கு அறிவித்தேன். சிலர் சம்பளத்தை இருபதாயிரம் உயர்த்தச் சொன்னார்கள்.

2024இல் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பை வழங்கினோம். ஆனால் அந்த பத்தாயிரம் ரூபாய் போதாது. பணத்தின் மதிப்பு 50சதவிகிதம் குறையும் போது, மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். சில குழந்தைகள் காலை உணவு இல்லாமல் பாடசாலைக்குச் செல்கின்றனர். பல குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பகுதிநேர வகுப்புகளுக்கு செல்வதை நிறுத்திவிட்டனர்.

சமூக அமைப்புகள் சிதைவதை நான் விரும்பவில்லை. இதன்படி, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய உதய செனவிரத்ன குழு நியமிக்கப்பட்டது. அவர்களது சிபாரின் பிரகாரம் சம்பளத்தை உயர்த்த முடியாதென திறைசேரியின் செயலாளர் கூறினார்.

ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடி உரிய சம்பளத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதை கண்டறியுமாறும் கூறினேன். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதாகவும், ஒரே ஆண்டில் சம்பள உயர்வை வழங்காமல் 50 சதவீதத்தை ஓராண்டிலும், மீதி 50 வீதத்தை மறுவருடத்திலும் வழங்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

மீண்டும் எனது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்கவுடன் முதலில் கலந்துரையாடினேன். எனது பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருடனும் கலந்துரையாடினேன். இறுதியில் இந்த சம்பள உயர்வை வழங்குவதற்கு உடன்பாட்டுக்கு வந்தோம்.

அதன் பின்னர்தான் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தேன். அந்த அமைச்சரவை ஆவணத்தில் ஜனாதிபதி என்ற முறையில் கையெழுத்திட்டுள்ளேன். அந்த முடிவுக்கு திறைசேரியின் கருத்துகள் தேவையில்லை. அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்கலாம். நாங்கள் ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சரவை கையேட்டின் படிதான் செயல்படுகிறோம்.

எனது நண்பர் விஜித ஹேரத் இதற்கு முன்னர் அமைச்சரவையில் இருந்ததாக நான் நினைக்கவில்லை. அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எமது அரசாங்கம் எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டபூர்வமானது.

அமைச்சு என்பது ஒரு அமைப்பு. அமைப்புக்கு சட்டங்கள் இல்லை. அரசியலமைப்பின் 52வது பிரிவின் கீழ் அமைச்சரின் தலைமையில் அமைச்சு உள்ளது.” என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.