வனவிலங்கு திணைக்கள ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

0
16

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை வனவிலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் இந்திக பீரிஸ் தெரிவிக்கையில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தற்போதைய அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தன்னிச்சையாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை திணைக்களத்தில் இணைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த நியமனங்களுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் நியமன நடைமுறையில் உள்ள குறைபாடுகள் குறித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்குமாறு கோரியிருந்ததாகவும் அவர் கூறினார்.

எனினும், எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படாமல், பணிப்பாளர் நாயகம் தனது விருப்பப்படி இந்த நியமனங்களை முன்னெடுத்து வருவதாகவும், இதனால் கள உதவியாளர்கள், இரண்டாம் நிலை அதிகாரிகள், வனவிலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள், வனப்பகுதி உதவி அதிகாரிகள், வனப்பகுதி பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜூலை 13ஆம் திகதிக்கு முன்னர் கலந்துரையாடல் நடத்துமாறு கோரியிருந்த போதிலும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக இன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதுடன், பல கள அதிகாரிகள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் இந்திக பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here