தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து இந்நாட்டு விவசாயிகளை அவமதித்து, அவர்களை துயருக்குள் தள்ளி வருகின்றது. அரசாங்கத்திற்கு இலட்சக்கணக்கில் வாக்களித்த விவசாயிகள் கசிப்புக்காரர்களாகவும், செயற்கை விவசாயிகளாகவும் மாறியுள்ளனர்.
அன்று மக்கள் விடுதலை முன்னணிக்கு வளமாக இருந்த விவசாயிகள் இன்று அவர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சரின் கூற்றுப்படி ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு ரூ. 137 செலவான போதிலும், அரசாங்கம் ரூ. 120 நிலையான விலையையே பெற்றுக் கொடுக்கின்றது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் விதை நெல் கிடைக்காமை, தரமான உரம் மற்றும் விதை நெல் தட்டுப்பாடு, விவசாய இரசாயனங்களின் தரம் குறைந்துள்ளமை போன்ற பிரச்சினைகள் காணப்படுவதுடன், விவசாய உபகரணங்களின் விலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன.
யானை-மனித மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் அறுவடைக்கு நிலையான விலை இல்லை. நெற் களஞ்சியசாலைகளில் கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இன்னும் அவ்வாறே காணப்படுகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் விவசாயிகளுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும் என்ற கேள்வி எழுகின்றது.
அன்று தேர்தல் காலத்தில் வயல்களில் நெற்கதிர்களை வாயில் கடித்துக் கொண்டு ரூ. 150 உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என்று கூறினாலும், தற்சமயம் நெல் விலை அதிகரித்தால் நுகர்வோருக்கு அநீதி ஏற்படும் எனக் கூறி வருகின்றனர்.
இன்று நுகர்வோரோ அல்லது விவசாயியோ அல்ல, மாறாக இடைத்தரகர்களே இங்கு அதிக இலாபம் ஈட்டு வருகின்றனர். எனவே, இப்போதாவது விவசாயிகளின் செலவுக்கு ஏற்ற நியாயமான விலையை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து, இலாபத்தை ஈட்டிக் கொடுக்க வேண்டும்.
போலவே, சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்து, நெல் கொள்வனவை மேலும் முறைப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். மக்கள் ஆணைக்கு மாறு செய்யாமல் விவசாயிகளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
