Saturday, May 4, 2024

Latest Posts

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 9 இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்!

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களில் 08 பேர் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் வசிக்கும் ஒன்பதாவது நபர், சம்பவம் நடந்த போது அங்கு இல்லை என்றும், அவர் இதுவரை தொடர்பு கொள்ளப்படவில்லை என்றும் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்க தெரிவித்தார்.

“துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 09 இலங்கையர்கள் இருந்ததாக எமது தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரையும் அடைய முயற்சித்தோம். சிலரை எங்களால் தொடர்பு கொள்ள முடிந்தது, சிலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

“இருப்பினும், அவர்கள் ஒன்பது பேரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். ஒன்பதாவது நபர் இடிந்து விழுந்த கட்டிடம் ஒன்றில் வசிப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எட்டு பேர் பற்றிய அறிக்கைகள் எமக்கு கிடைத்துள்ளன. ஆனால், கட்டிடம் இடிந்து விழும் போது அந்த நபர் கட்டிடத்தில் இல்லை என்பதை பின்னர் அறிந்து கொண்டோம்” என அவர் தெரிவித்தார்.

அந்த நபர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறித்து தங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றும், அந்நாட்டில் உள்ள அனர்த்த முகாமைத்துவ முகவரகத்தின் ஊடாக அந்த விவரங்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தூதுவர் குறிப்பிட்டார். “இப்போது எங்களிடம் உள்ள அனைத்து தகவல்களும் இதுதான்,” என்று அவர் கூறினார்.

அந்த நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து திஸாநாயக்க கூறுகையில், பாரிய நிலநடுக்கத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்படுவதாகவும், மேலும் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதாகவும், இது அங்காராவின் தலைநகரிலும் சற்று உணரப்பட்டதாகவும் கூறினார்.

அத்துடன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் இலங்கையர்கள் தொடர்பிலும் மேலதிக தகவல்களைத் திரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தூதுவர் தெரிவித்தார்.

தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று திங்கள்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் துருக்கியின் முக்கிய மாகாண தலைநகரான காசியான்டெப் என்ற துருக்கிய நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று திங்கள்கிழமை பிற்பகல் மத்திய துருக்கியில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.