Friday, March 29, 2024

Latest Posts

பௌத்தம், பௌத்த மரபு குறித்த சர்வதேச வினாவிடை போட்டியில் வெற்றி

பௌத்தம் மற்றும் பௌத்த மரபு குறித்த சர்வதேச வினாவிடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வொன்று 2022 பெப்ரவரி இரண்டாம் திகதி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

கௌரவ கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அதேபோல மகா சங்கத்தினர், அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

புத்த பெருமானின் வாழ்க்கை மற்றும் பௌத்த மதத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்கள் தொடர்பில் நடத்தப்பட்டிருந்த இந்த வினா விடை போட்டியானது அறநெறிப் பாடசாலைகள், பிரிவெனா மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் நடத்தப்பட்டிருந்தது. 14 வயது முதல் 22 வயது வரையிலான மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக இலங்கை முழுவதிலும் உள்ள 800 பிரிவேனாக்களில் 2021 டிசம்பரில் இந்த வினா விடைப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போட்டியானது மூன்று சுற்றுக்களாக நடத்தப்பட்டது. முதலாவது சுற்று பிரிவேனாக்கள் மட்டத்திலும், இரண்டாவது சுற்று மாகாண மட்டத்திலும் நடத்தப்பட்டு மூன்றாவது சுற்று தேசிய மட்டத்தில் நடத்தப்பட்டிருந்தது. இவ்வினா விடைப் போட்டியில் கிட்டத்தட்ட 6000 பரீட்சார்திகள் பங்குபற்றியிருந்தனர். கௌரவ கல்வி அமைச்சர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய திரு கோபால் பாக்கலே ஆகியோரால் இப்போட்டியின் மூன்று வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன. இவர்களுக்கான சிறப்பு பரிசுகளில் முழுமையான அனுசரணையுடன் ஒவ்வொரு வெற்றியாளர்களும் தமக்கான துணை ஒருவருடன் இந்தியாவிலுள்ள பௌத்த வளாகங்களுக்கான ஐந்து நாட்கள் சுற்றுலா உள்ளிட்டவை அடங்குகின்றன.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய உயர் ஸ்தானிகர், கல்வி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு ஆகியவை இப்போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு வழங்கிய ஆதரவுக்காக நன்றியினை தெரிவித்திருந்தார். அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க நாகரீக பிணைப்பினை பௌத்த மரபுகள் உருவாக்கியிருப்பதாக அவர் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார். மேலும் நமது இரு நாடுகளினதும் மக்கள் இடையிலான பிணைப்பினை வலுவாக்குவதுடன் எமது பொதுவான பௌத்த கலாசார மரபினை மேம்படுத்துவதற்கும் இப்போட்டி ஆதரவாக அமைகின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை இந்தியாவிற்கு வரவேற்பதற்கு இந்திய அரசாங்கம் ஆவலுடன் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை இந்நிகழ்வில் உரையாற்றியிருந்த கௌரவ அமைச்சர் கௌரவ கல்வி அமைச்சர் அவர்கள், இந்தியாவும் இலங்கையும் தமது சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவினை கொண்டாடுவதாக குறிப்பிட்டதுடன், இரு நாடுகளினதும் சுதந்திர போராளிகள் இடையிலான நெருக்கமான உறவு தொடர்பாகவும் நினைவூட்டினார். பௌத்த மத அடிப்படையிலான உறவுகளை உருவாக்குதல் உட்பட சகல கோணங்களிலும் இலங்கைக்கான ஆதரவை வழங்கிவரும் இந்திய அரசிற்கும் தலைமைத்துவத்திற்கும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவு கூரும் அசாதி கா அம்ரித் மஹோற்சவ் கொண்டாட்டங்கள் 2022 ஜனவரி 26ஆம் திகதி இந்திய வெளியுறவு அமைச்சர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இந்த பரிசில் வழங்கும் நிகழ்வுகளும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட தொடர் விசேட நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே நடைபெற்றுள்ளன.

பௌத்த மத விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அண்மைய செயற்பாடுகளில், பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட விசேட நன்கொடையான 15 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டம், இந்த திட்டம் தொடர்பாக அரசாங்கங்கள் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இரு தரப்பினராலும் தயாரிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ளது; குஷிநகரில் சர்வதேச விமான நிலையத்தின் அங்குரார்ப்பணம், இச்சந்தர்ப்பத்தில் ஒக்டோபர் 2021 புனித வப் போயா தினத்தில் இலங்கையிலிருந்து முதலாவது விமானம் வரவேற்கப்பட்டிருந்தமை; 2021 ஒக்டோபரில் வஸ்கடுவா ராஜகுரு ஸ்ரீ சுபூதி மகா விகாரையின் புனித கபிலவஸ்து புத்த சின்னங்கள் இந்தியாவில் காட்சிப்படுத்தப்படிருந்தமை உள்ளிட்டவை அடங்குகின்றன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.