போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச மீது தொடரப்பட்டுள்ள வழக்கை வரும் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
அப்போது, சந்தேகநபரான ஷஷி வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, வழக்கில் சாட்சிகளாக பயன்படுத்தப்படவுள்ள கணினி மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பான கணினி அமைப்பை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சான்று ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதற்கான அணுகல் இதுவரை வழங்கப்படாததால் வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கில் சாட்சிகளாக பயன்படுத்தப்படவுள்ள ஆவணங்கள் உருவாக்கப்பட்ட கணினி அமைப்பை பாதுகாப்பு தரப்பிற்கு பரிசோதிக்க அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து அடுத்த விசாரணை நாளில் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வு துறைக்கு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், வழக்கை வரும் 25ஆம் திகதி மீண்டும் அழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
