லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது வழங்கப்பட்டதாக கூறப்படும் அமெரிக்க டொலர் 2 மில்லியன் லஞ்சம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ஆணைக்குழுவில் ஆஜராகி, சிறிது நேரத்திற்கு முன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக லஞ்ச ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பல ஆதரவாளர்களும் அங்கு வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக Airbus A-330 வகை 06 விமானங்களும், A-350 வகை 08 விமானங்களும் கொள்வனவு செய்யப்பட்ட போது, அமெரிக்க டொலர் 2 மில்லியன் லஞ்சம் பெற்றதாக அந்நாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த மறைந்த கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக கபில சந்திரசேன இரண்டு மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டாலும், பிணையளிப்பாளர்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்து அவரது பிணையை ரத்து செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பின்னர், கபில சந்திரசேன வழங்கியதாக கூறப்படும் வாக்குமூலத்தின் படி, குறித்த Airbus ஒப்பந்தத்தில் லஞ்சமாக கிடைத்த பணத்தில் இருந்து ரூபாய் 60 மில்லியன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெற இன்று அவரை லஞ்ச ஆணைக்குழு அழைத்திருந்தது.
எனினும், லஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் மிரட்டி மற்றும் கட்டாயப்படுத்தி தன்னிடம் அந்த வாக்குமூலம் பெறப்பட்டதாகக் கூறி, கபில சந்திரசேன அனுப்பிய சத்தியப்பிரமாணப் பத்திரமொன்றை அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
