துருக்கியை உலுக்கிய பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் அடக்கம் சுகாதார அதிகாரிகளினால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க உயிரிழந்த இலங்கையரின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (பிப். 06) அதிகாலையில் தென் துருக்கி மற்றும் சிரியாவின் வடமேற்கில் 7.8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது.
துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் இருபுறமும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 40,000 ஐ நெருங்குகிறது. அதே நேரத்தில் 86,000 க்கும் அதிகமானோர் பூகம்பப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
துருக்கியின் தென்கிழக்கு தொடர்ந்து பல நில அதிர்வுகளை அனுபவித்து வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் உரையாடியதுடன், தீர்க்க முடியாத துயரத்தின் இந்த நேரத்தில் துருக்கி மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இலங்கை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம், துருக்கி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலநடுக்கம் மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் பதினாறு இலங்கையர்களின் நலனைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அவர்களில் 15 பேர் பத்திரமாக இருப்பதாக தூதரகத்தினால் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், துருக்கியின் Hatay/Antakya மாகாணத்தில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இலங்கையரின் மரணத்தை தூதரகத்தால் உறுதிப்படுத்த முடிந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
N.S