BYD வாகனங்கள் குறித்து இலங்கை சுங்கத்துக்கு உத்தரவு

0
25

மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், John Keells CG Auto நிறுவனம் எதிர்காலத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் BYD வாகனங்களை வங்கி உத்தரவாதம் மற்றும் நிறுவன பத்திரத்தின் அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சுங்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, John Keells CG Auto நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த பின், நீதிபதிகள் ரோஹன அபேசூரிய மற்றும் பிரியந்த பெனாண்டோ அடங்கிய அமர்வு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாகவும் பல சந்தர்ப்பங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் ஏற்படுவது மனுதாரர் நிறுவனத்திற்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு, நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணாக்குவதாக அமர்வு குறிப்பிட்டது.

சுங்கச் செயல்முறைகளில் தாமதம் ஏற்படுவதால் வாகனம் வாங்க எதிர்பார்த்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதும் நீதிமன்றத்தின் கருத்தாகும்.

இவ்விடத்தில், இலங்கை சுங்கம் தங்களுக்கு இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு இல்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்தது. இருப்பினும், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் தொடர்பாக சட்ட மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்களை முன்னதாக அறிவிப்பது சிறந்ததாக இருக்கும் என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

BYD நிறுவனத்தின் சில மாடல்களில் மோட்டார் திறனை குறைத்து காட்டி குறைந்த வரி செலுத்தி வாகனங்களை விடுவிக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பல சந்தர்ப்பங்களில் இலங்கை சுங்கம் வாகனக் கையிருப்புகளை தற்காலிகமாக தடுத்து வைத்திருந்தது. பின்னர், மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், வங்கி உத்தரவாதம் மற்றும் நிறுவன பத்திரத்தின் கீழ் அவை விடுவிக்கப்பட்டன.

இந்த வாகனங்களின் மோட்டார் திறன் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here