மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர் நிலைமை எப்போது முடிவடையும் என்பது தெளிவில்லாத காரணத்தால், மக்கள் மின்சார பயன்பாட்டை அதிகளவில் குறைத்து முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
நேற்று (24) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த மோதல் விரைவில் முடிந்தாலும் கூட, எண்ணெய் உற்பத்தி நாடுகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள், களஞ்சியங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு ஏற்பட்ட சேதங்களால் உடனடியாக எரிபொருள் விலைகள் குறையும் என எதிர்பார்ப்பது கடினம் என கூறினார்.
எனவே, இதற்காக முன்கூட்டியே தயாராக இருப்பது அவசியம் என்றும், மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக நகரப் பகுதிகளில் தேவையற்ற மின்விளக்குகளை அணைக்க வேண்டும் என்றும், வீடுகளில் மின்சார சாதனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். உதாரணமாக, தினமும் வாஷிங் மெஷின் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வாரத்தில் சில நாட்களில் மட்டுமே, குறிப்பாக பகல் நேரங்களில் (off-peak hours) பயன்படுத்தலாம் என கூறினார்.
மேலும், அதிக வெப்பநிலை காரணமாக ஏர் கண்டிஷனர் மற்றும் விசிறி பயன்பாடு அதிகரிப்பதால் மின்சார நுகர்வு உயரும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையை சமாளிக்க மக்கள் ஒத்துழைப்புடன் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால், தற்போதைய சிக்கலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
