Thursday, March 28, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சுருக்கம் 30/03/2023

1.தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ASEAN) உள்ள நாடுகள் மீது விசேட கவனம் செலுத்தி பெரிய மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைவாக இலங்கை-தாய்லாந்து இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நான்காவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறவுள்ளது.

2.நாட்டின் மாணவர்கள் 2048ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் ; தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

3.நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் – அதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 135 ரூபாவாலும், ஒட்டோ டீசல் விலை 80 ரூபாவாலும், சூப்பர் டீசலின் விலை 45 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை குறைப்பினால் பஸ் கட்டணங்கள் மற்றும் முச்சக்கர வண்டி கட்டணங்களும் குறைவடைந்துள்ளன.

4.அரசுக்கு சொந்தமான மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில், ரூ.883 மில்லியன் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் பி.எம். சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5.கிரிப்டோ கரன்சிகளுடன் (cryptocurrencies) தொடர்புடைய பல்வேறு அபாயங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகள் உட்பட பிற அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு, கிரிப்டோகரன்சிகளில் முதலீட்டை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் தரப்பினர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. கிரிப்டோகரன்சி நாணயத்தை சட்டபூர்வமாக்கும் யோசனை எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ மத்திய வங்கியால் அனுமதி வழங்கவில்லை. கிரிப்டோகரன்சியை வைப்புத்தொகையில் ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது அதற்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை என்றும் மத்திய வங்கி கூறியுள்ளது.

6.2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருதுவில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜாஸ்மின் கொல்லப்பட்டதை மூன்றாவது டிஎன்ஏ சோதனை உறுதிப்படுத்தியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது – 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு சாரா ஜாஸ்மின் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக நம்பப்படும் நிலையிலேயே பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

7.புதிய வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுக்கும் சவூதி அரேபியாவின் மனித வளம் மற்றும் சமூக மேம்பாடு அமைச்சுக்கு சொந்தமான டகாமோல் நிறுவனத்துக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

8.உத்தேச ‘பயங்கரவாத எதிர்ப்பு திருத்தச்சட்டம்’ நீதித்துறை மற்றும் நாடாளுமன்றத்தை கடுமையாக பலவீனப்படுத்தும் என்றும், மக்களின் வாக்குரிமை, கருத்துக்களை வெளிப்படுத்துதல், சட்டப்பூர்வமான அமைதியான போராட்டங்களில் பங்கேற்றால் மற்றும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை நடத்தும் உரிமையை பறிக்கும் என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக
நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

9.முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் – புத்தளம் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியை படுகொலை செய்ய நாலக குமார ‘சதித்திட்டம்’ ஒன்றை திட்டியதாக வெளியான செய்திகளுடன் நாலக சில்வாவின் பெயரும் பிரபல்யமானது.

10.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 100,000 ரூபாய்வரை அபராதத் தொகையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.