இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில், நிலத் தகராறு காரணமாக, இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கியுடன் ஒரு பெண்ணை மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நிலத்தின் உரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதுடன், அந்த நிலம் தமக்குச் சொந்தமானது என எம்.பி. அர்ச்சுனா கூறுகிறார். அதே நேரத்தில், ஒரு பெண்ணும் அந்த நிலத்தின் உரிமையை கோரி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 25ஆம் திகதி அந்த நிலத்தை சுத்தப்படுத்தும் பணியில் இருந்தபோது, சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு பெண்கள், நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி எம்.பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் தீவிரமடைந்ததன் காரணமாகவே, எம்.பி. ஒருவர் பெண்ணை துப்பாக்கியால் மிரட்டியதாக கூறப்படுகிறது.
