– அமைச்சர் கே.டி. லால்காந்த
தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை என்றாலும், அரச சேவையில் இன்னும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வேளாண்மை, நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“சாதாரண மக்களின் ஆட்சியாக நாம் தொடர்ந்து ஆட்சியில் இருப்போம் என்ற உறுதிப்பாட்டில் இருக்கிறோம். 2024 வரை எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று ரணில் விக்ரமசிங்க கூறினார். ‘பெல்ட்டை இறுக்கிக் கொள்ளுங்கள்’ என்றும் சொன்னார். சாப்பிட உணவு இல்லாதபோது வயிறு குறையும்; அப்போது பெல்ட்டில் இன்னும் சில துளைகள் போட வேண்டியிருக்கும். நாட்டை மீட்க 2048 வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் நாங்கள் தற்போது அனைத்து அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம். அரச ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. போர் போன்ற சூழ்நிலை ஏற்பட்ட போதிலும் சம்பளங்களை குறைக்கவோ, விவசாயிகளுக்கான மானியங்களை நீக்கவோ நாம் செய்யவில்லை. அனைத்தையும் திறம்பட நிர்வகித்து வருகின்றோம்.
இப்போது நாட்டில் பணப் பற்றாக்குறை பிரச்சினை இல்லை. ரூ.100 ஒதுக்கப்பட்டால், அதில் ரூ.60 மதிப்பிலான வேலைகளே நடைபெறுகின்றன. அரச சேவையில் இன்னும் திருட்டும் ஊழலும் உள்ளது. அரசியலில் அது இல்லை. ஆனாலும் மக்கள் இன்னும் எங்களைத் திட்டுகின்றனர். ‘நீங்கள் இன்னும் இதை மாற்றவில்லை’ என்று கேட்கிறார்கள்.”
தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) புதிய ஊழியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அமைச்சர் கே.டி. லால்காந்த இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
