இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன பலவேகய (NPP) தலைமையிலான அரசே நிலைத்திருக்கும் என்றும் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கலுத்துறையில் மே 1 ஆம் திகதி நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சியில் உள்ள சிலர் சிறிய அளவில் போராட்டங்களை நடத்தி அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், “போராட்டம் நடத்துவது எப்படி என்பதை நாங்கள்தான் இந்த நாட்டுக்கு கற்றுக் கொடுத்தோம். சிலர் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு இந்த அரசை மாற்ற முடியாது. இந்த அரசை பாதுகாக்க மக்களின் பெரிய ஆதரவு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டை உருவாக்கும் பணியில் எதிர்காலத்திலும் ஜாதிக ஜன பலவேகய அரசே செயல்படும் என்றும், மாற்று அரசுகள் உருவாக வாய்ப்பில்லை என்ற தனது நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
