Sunday, May 19, 2024

Latest Posts

காதலியைப் பார்க்கச் சென்றபோது காணாமல்போன இளைஞர் 15 நாட்களின் பின் சடலமாக மீட்பு!

குளியாப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் காதலியைப் பார்ப்பதற்காகச் சென்று காணாமல்போன இளைஞர் இன்று மாதம்பே, பனிரெண்டாவ பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காடொன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாப்பிட்டி, இலுக்ஹேன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்படி, தகவல் கிடைக்கப்பெற்ற பகுதிகளுக்கமைய பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், குறித்த சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தமையால் அதற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்படி சந்தேகநபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்த நிலையில், அவரது தாய் மற்றும் தந்தையைப் பொலிஸார் கைது செய்தனர்.

வெலிமடை மற்றும் கப்பெட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் இருவர் குற்றச் செயல்களுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் எனவும் அவர் கூறினார்.

இதற்கமைய, காணாமல்போன இளைஞர் படுகொலை செய்யப்பட்டார் எனத் தெரியவந்தபோதும், அது எவ்வாறு இடம்பெற்றது உணவு, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, குறித்த இளைஞரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் நேற்று குளியாப்பிட்டி நீதிமன்றில் ஆஜராகினார் எனவும், கொலை செய்த நபர் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.