தற்போதைய சூழ்நிலையிலேயே நாட்டை பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும், நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகள் தன்னிடம் இருப்பதாகவும் சர்வஜன பலயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கட்சித் தொண்டர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இந்த கருத்துகளை வெளியிட்டார்.
“திட்டமில்லாமல் பொறுப்பேற்பது சரியல்ல. ஆனால் இப்போது நாட்டை எங்களிடம் ஒப்படைத்தால் உடனே செயல்பட்டு காட்ட முடியும். தற்போதைய மிகப்பெரிய பிரச்சினை டொலருக்கு ஏற்பட்டுள்ள அழுத்தமே. இதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களுடன் நேர்மையான, நம்பிக்கைக்குரிய உரையாடலை ஆரம்பிப்பதே முதன்மையான நடவடிக்கை. இன்று நாட்டில் இல்லாமல் போயிருப்பது டொலர் அல்ல, தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையே,” என அவர் கூறினார்.
மேலும், “கடன் வழங்குநர்களின் விருப்பப்படி மட்டும் நாட்டின் பொருளாதாரத்தை நடத்த முடியாது. எங்களிடமிருந்து கடனை மீட்டெடுப்பதில் அவர்கள் கூட சிரமமான நிலையில்தான் உள்ளனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அந்த நிலையை நாம் சரியாக பயன்படுத்தவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.
தான் International Monetary Fund அமைப்புக்கு எதிரானவர் அல்ல என்றும், ஆனால் தற்போதைய IMF திட்டத்தை நடைமுறைப்படுத்திய விதமே நாட்டை இந்த நெருக்கடிக்கு தள்ளியுள்ளதாகவும் திலித் ஜயவீர குற்றஞ்சாட்டினார்.
