இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல்
இலங்கை அரசாங்கம் கடந்த காலத்தில் இந்தியாவுடன் எட்டிய பல முக்கிய ஒப்பந்தங்களை இன்னும் நடைமுறைப்படுத்தாதது தொடர்பாக இந்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் தொடர்பான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு (Colombo Security Conclave) ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்தாதது, கொழும்பு கோட்டை கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள அந்த அமைப்பின் செயலகத்திற்கு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கடற்படை உயரதிகாரிக்கு பணியைப் பொறுப்பேற்க தேவையான வசதிகளை வழங்காதது உள்ளிட்ட விடயங்கள் இந்தியாவின் அதிருப்திக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
அதேபோல், திருகோணமலை சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சூரிய மின்நிலையத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை இன்னும் ஆரம்பிக்காதது மற்றும் இந்தியாவின் ராமேஸ்வரம், இலங்கையின் தலைமன்னார் ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை தெளிவான பதிலை வழங்காததும் இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததாகவும் அந்தத் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
