பிரபல ஆடை விற்பனை நிறுவனமான ‘ஹவுஸ் ஒப் ஃபாஷன்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் ப்ரீதி ஜயவர்தனவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பாக, சுங்க அதிகாரிகள் குழுவொன்று முன்தினம் அதிகாலை ப்ரீதி ஜயவர்தனவின் இல்லத்திற்குச் சென்று அவரைக் கைது செய்திருந்தது.
கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது, கொழும்பு பிரதான நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று அவரை நேரில் பார்வையிட்டு, விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதன்படி, அவர் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
