இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்ட சமயத்தில் அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதற்கு அடுத்ததாக உள்நாட்டு பிரச்சனை முடிந்த பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக எதிர்கால வாழ்க்கையை தேடி தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவில் அகதிகளாக வந்து கொண்டிருந்தனர்.
ஆனால் காதலனுக்காக ஒரு பெண் இலங்கையில் இருந்து கடல் கடந்து வந்திருக்கிறார். அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தற்போது அறியலாம்..
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் இளம் பெண் ஒருவர் அகதியாக வந்திருப்பதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கடலோர பாதுகாப்பு படையினர் அங்கு சென்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை மன்னார் ஆண்டகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த விதுர்ஷியா (வயது 25) என்பது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே தனது தாய், தந்தையருடன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்தது தெரிய வந்தது. அப்போது விதுர்ஷியா இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விதுர்ஷியா விமானத்தில் இலங்கைக்கு சென்று இருக்கிறார். ஆனால் அவர் மீண்டும் இந்தியா வருவதற்கான விசா கிடைக்கவில்லையாம். எனினும் தான் காதலித்த இளைஞரை கரம் பிடிக்க வேண்டும் என உறுதி கொண்டிருந்த விதுர்ஷியா, கள்ளப் படகில் தமிழகம் தப்பி வர முடிவு எடுத்தார்.
அதன்படி தனது நகையை விற்பனை செய்து இலங்கை பணம் 2 லட்சம் ரூபாயை படகோட்டி ஒருவரிடம் கொடுத்து தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ஏறி அரிச்சல்முனைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை கடற்கரை பகுதியில் இறக்கிவிட்ட படகோட்டி மீண்டும் இலங்கைக்கு திரும்பியதாகவும் விதுர்ஷியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் இளம் பெண் விதுர்ஷியாவை மண்டபம் அகதிகள் முகாமில் போலீசார் தங்க வைத்துள்ளனர். (இணையம் )