ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

Date:

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை” மூடி விட, உங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சியை உடனடியாக கை விடுங்கள், என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.        

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எழுதி அனுப்பி உள்ள கடிதத்தில் மேலும்  தெரிவித்துள்ளதாவது;

நுவரெலியா, கொழும்பு அவிசாவலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, பதுளை, மொனராகலை, காலி, மாத்தறை, குருநாகலை, ஆகிய மாவட்ட பெருந்தோட்ட பிராந்தியங்களில் வாழும் வாழும், மலையக தமிழ் மக்கள் சமூக, பொருளாதார, கலாச்சார, வளர்ச்சிகளில் வளர்ச்சி குன்றிய பிரிவினர் என்பதை புள்ளி விபரங்கள காட்டுகின்றன. இது 200 வருட சாபம். இதற்கு காரணம், இந்த சமூகம் இந்நாட்டின் தேசிய வரம்புக்குள் கொண்டு வர படாமல் இன ரீதியாக ஒதுக்கி வைக்க பட்டமை ஆகும். இதற்கு காரணம், இவர்கள் அந்நியர்கள், இவர்கள் தமிழர்கள், இவர்களுக்கு காணி வழங்க கூடாது, வீடு வழங்க கூடாது, தேசிய கல்வி கட்டமைப்புகள் கொண்டு வர கூடாது, தேசிய சுகாதார கட்டமைப்புகள் கொண்டு வர கூடாது, பிரஜா உரிமை வழங்க கூடாது, என எம்மீது காட்ட பட்ட, காட்ட படும் இனவாதம்தான்.

200 வருட ஒடுக்கு முறையில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வரும் இந்த சமூகத்தின், கல்வி தரும் பாடசாலைகள், 1976ம் ஆண்டிலேயே தேசிய கல்வி கட்டமைப்புக்குள் கொண்டு வர பட்டன. கடைசி தொகுதி குடியுரிமையும் 2003ம் ஆண்டிலேயே வழங்க பட்டு முழுமை அடைந்தது.  ஆகவே தேசிய வளர்ச்சி பாதையில் நாம் தாமதமாகவே நடக்க ஆரம்பித்தோம். இதனால், இந்த சமூகம், பின்தங்கிய சமூகமாக இன்றும் இருக்கிறது.

இந்த இன ஒதுக்கல், கொள்கையை இந்நாட்டில் அனைத்து பெரும்பான்மை கட்சிகளும் முன்னெடுத்தன. இந்த சூழலில்,  இதை கணக்கில் எடுத்தே 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பதவியில் இருந்த அன்றைய நல்லாட்சி அரசில், தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் பல்வேறு நல திட்டங்களை முன்னெடுத்தோம். அதுவரை மறுக்க பட்டு வந்த அல்லது உதாசீனம் செய்ய பட்டு வந்த, காணி உரிமை, வீட்டு உரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை ஆகியவற்றை பெற்று எடுக்கும் பெரும் பணியை நாம் ஆரம்பித்தோம்.

இவற்றை வெறும் ஒரு துறை சார்ந்த அமைச்சினால் மட்டும் செய்ய முடியாது. அமைச்சுகளுக்கு மேலாக, பல்வேறு துறை சார்ந்த அமைச்சுகளின் பணிகள் கூட்டி இணைக்க பட வேண்டும். இந்த பிரதான தேவை பின் புலத்தில், மலையக மக்களின் விசேட குறைதீர் (Affirmative Policy) கொள்கை தேவை அடிப்படையில் உருவாக்க பட்ட நிறுவனமே, மலையக அதிகார சபை ஆகும்.  

நீங்கள் இன்று இதை, ஒரு அமைச்சின் அங்கமாக மாற்ற முயல்கிறீர்கள். அமைச்சு என்பதும் அதன் நடவடிக்கைகளும், நாட்டின் ஜனாதிபதியால் தீர்மானிக்க படுகின்றன. நாளை குறிப்பிட்ட அமைச்சு இல்லாமல் போகுமானால், அந்த அமைச்சின் அங்கமும் காணாமல் போய் விடும். ஆனால், அமைச்சரவையில் தீர்மானிக்க பட்டு, பராளுமன்றத்தில் ஒப்புதல் பெற பட்டு, சட்டம் மூலமாக உருவாக்க பட்ட திணைக்களங்கள், அதிகார சபைகள், என்பன அமைச்சுகள், அரசாங்கங்கள் மாறுகின்ற காரணத்தால், மாறி விடாது. காணாமல் போய் விடாது. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் புரிந்து கொண்டு, இந்த முயற்சியை நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஆட்சியை பொறுப்பு ஏற்று இம்மாதத்துடன் ஒரு வருடம் நிறைவு பெருகிறது. வாழ்த்துக்கள். மலையக மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி உள்ளீர்கள். ஆனால், இந்த ஒரு வருடத்தில் சொல்லி காட்ட, எடுத்து காட்ட, மலையக பிராந்தியத்துக்கு உங்கள் அரசாங்கம் காத்திரமாக எதுவும் செய்து விட வில்லை. ஆனாலும், நாம் பொறுமையாக காத்திருக்கிறோம். நீங்கள் எதுவும் செய்ய வில்லை. என்பதை விட, இன்று, இருப்பதையும் பிடுங்கி எடுக்க முயல்கிறீர்கள். அதையும் நாம் பொறுமையாக ஏற்று கொண்டு இருக்க முடியாது என்பதை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

நீங்கள் செய்ய முயலும் இந்த காரியத்தின் பாரதூர தன்மையை தெரிந்து கொண்டா, அல்லது தெரியாமலா, நீங்கள் செய்கிறீர்கள் என எனக்கு விளங்கவில்லை.  எதுவாக இருந்தாலும், 2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது ஆட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை” மூடி விட, உங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சியை உடனடியாக கை விடுங்கள் என கோருகிறேன்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா முக்கிய அறிவிப்பு

எல்லை நிர்ணயச் செயல்பாட்டில் உள்ள பல சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத்...