இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட ரூ. 2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன.
இச்செயன்முறையின் முன்னேற்றத்துக்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படியாக சுற்றோட்டத்திற்கு விடப்படும்.
இந்த மாற்றத்தின் போது பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ள மத்திய வங்கி, இயந்திர அளவுத்திருத்தம் முடிந்ததும் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கி வழிகளிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளது.
எனவே, இதற்குத் தேவையான காலகட்டத்தில் பொதுமக்களின் ஆதரவை இலங்கை மத்திய வங்கி பெரிதும் பாராட்டுகிறது என்றும் மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இது தொடர்பாக கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ள நாயணத் திணைக்களத்தை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்குள் பிரவேசிக்குமாறும் அல்லது அதன் சமூக ஊடகத் தளங்களைப் பின்தொடருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.