பங்காளதேஷில் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதிக ஓட்டங்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ஓட்டங்களே சேர்த்தது.
அதிகபட்சமாக இனோகா ரணவீர 18 ஓட்டங்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.
ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இலங்கையை 65 ஓட்டங்களில் கட்டுப்படுத்தியது இந்தியா இதையடுத்து 66 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 8.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காமல்) குவித்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.
இதன்மூலம் ஏழாவது முறையாக இந்திய அணி ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளது. இன்றைய போட்டியின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.