மாத்தறை திஹாகொட பிரதேசத்தில் நேற்று (28) பாடசாலை மாணவர் ஒருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மித்தவெல – கந்தேபொல வீதியிலுள்ள இடமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்கள் குழுவொன்று பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிடச் சென்ற போது, திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கி வெடித்ததுடன், குறித்த மாணவன் மீது துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த 14 வயதுடைய மாணவன் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் திரண்டதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.