Sunday, September 29, 2024

Latest Posts

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை; காத்மாண்டு தூதரகம் அறிவிப்பு

மேற்கு நேபாளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 03) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பகுதியிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் இருப்பதாக காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போது நேபாளத்தில் சுமார் 100 இலங்கையர்கள் தங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள தூதரகம், அவர்களில் சுமார் 40 பேர் பொக்காராவில் உள்ள மாணவர்கள் எனவும், மேலும் 10 பேர் காத்மாண்டுவில் உள்ள மாணவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மீதமுள்ள 30 முதல் 40 நபர்கள் காத்மாண்டுவில் உள்ள சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களாகும்.

ஒவ்வொரு வருடமும், இந்தியா வழியாக லும்பினிக்கு ஏராளமான இலங்கை யாத்ரீகர்கள் வருகை தருவதாகவும், இம்முறை 50000 முதல் 600,00 வரை யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த யாத்ரீகர்கள் பொதுவாக லும்பினியில் குறுகிய காலத்தையே கழிப்பார்கள்.

எவ்வாறாயினும், நிலநடுக்கத்தின் போது வெளிநாட்டு பிரஜைகள் எவரும் உயிரிழந்ததாகவோ அல்லது காயமடைந்ததாகவோ தெரிவிக்கப்படவில்லை என இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

நேபாளத்தில் ஜர்கோட்டின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 150 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் நேபாள அரச அதிகாரிகள் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு இமயமலையில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் சுமார் 9,000 பேர் பலியாகியதற்குப் பிறகு இந்த நிலநடுக்கம் மிக அதிக உயிரிழப்பு ஏற்படுத்திய நிலநடுக்கமாக நேபாளத்தில் பதிவாகியுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.